Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

Monday, 3 February 2014

வரவின் செலவு!


பலரிடம் நேரம் நிறைய இருக்கின்றது.
விடாமல் எதையாவது பேசுவதற்கு!
சிலரிடம் பொறுமை நிறைய இருக்கின்றன்றது.
தொடர்ந்து எதையேனும் கேட்பதற்கு!

எண்ணற்ற வார்த்தைகளைச் செலவு செய்துவிட்டுப்
போய்விடுவார் பேசியவர்,
அடுத்த பொறுமைசாலியைத் தேடி.
அர்த்தமற்ற வார்த்தைகளை வரவு என எண்ணாது   
சென்றிடுவார் கேட்டவரும்,
தலைவலியைக் குறைக்கும் தைலம் தேடி.

யாருக்கும் பயனற்ற இந்த 
வார்த்தை வரவின் செலவுக் கணக்கில்
ஊழின் பயனைக் கழிக்காமல்... 
வாழ்வில் அர்த்தம் கூட்டாமல்...
அறிவின் ஊற்றைப் பெருக்காமல்...
அன்பின் ஆளுமையை வகுக்காமல்... 
அளவிடமுடியா அமைதியின்
அகல, நீள, ஆழம் அறியாமல்... 

உயிரின் தன்மை உணரா மனிதர் 
பேசிய, கேட்ட இடங்களில் எல்லாம்,
ஒலியின் தொடுக்கும் நார் அறுந்து 
சிதறிய எழுத்து மலர்களைப் போல் 
இறைந்து கிடக்கின்றன சில்லறை வார்த்தைகள்!

@PrakashSwamy