Saturday 4 April 2020

அஹம் பிரம்மாஸ்மி ~ க-விதை by ஸ்வாமி

அஹம் பிரம்மாஸ்மி 

~ க-விதை by ஸ்வாமி

.
நானொரு முள். 
மலரல்ல. 
மலராகும் விருப்பமோ தேவையோ எனக்கில்லை. 
மலர் என் சகோதரி.
ஒரே இடத்தில்தான் வசிக்கிறோம். 
இலைக் குடும்பத்துடன்.
செடி எம் தந்தை. 
நிலம் எம் தாய். 
.
அவளை விரும்புவோரே என்னை வெறுப்போரும். 
அவள் அழகானவள்...
நான் கூரானவன்...
வரம் கேளாமலே. 
அவள் யாரையும் மகிழ்விக்க மலரவில்லை.
நான் யாரையும் காயப்படுத்தக் கூராகவில்லை. 
அது எம் கடனுமல்ல. 
மலர்ந்து, விரிந்து, மணம் பரப்புவது அவள் குணம். 
எப்போதும் 'சும்மா இரு'ப்பதே என் தன்மை. 
அவளை முத்தமிடும் வண்டுகள் என்மீதும் அமர்வதுண்டு. 
தேனுண்ணும் முன்போ... பின்போ...
அவளைக் கவரும் மனிதர்கள் பற்றிய கவலை எனக்கில்லை. 
பறிக்கப்படுவதே அவளது பிறவிப்பயன். 
பறியாது போனால் பிரிந்து உதிர்வாள். 
மாலையில் சேர்வது அழகுக்கு அழகு. 
எத்தனையோ சகோதரிகள் வருவர், போவர். 
நான் எப்போதும் இருப்பேன். 
தாயின் மடியில்... தந்தையின் கரத்தில்... 
இலைக் குடும்பத்தின் இடையில்...
எல்லையற்ற கால வெளியில்.
ஒரே மாதிரி. 
மாற்றமின்றி.
சலனமின்றி.
என்னைச் சகியாமல், தவிர்ப்போர் எண்ணற்றோர். 
இலைகளையும் மதியாதோர்.
மலர்களை மட்டும் விரும்புவோர்.
ஆறறிவுள்ளோர். 
அவர்கள் உதிரம் சிந்துவது என் தவறில்லை. 
நானிருப்பதும் மலரும் இலையும் வசிக்கும் செடியில்தான். 
எப்போதும் மாறாது...
எதனாலும் அசையாது... 
எதன்மீதும் விருப்பமின்றி... 
யார்மீதும் வெறுப்புமின்றி... 
நானொரு முள்தான். 
ஆயினும்... 
நானே பிரம்மம்! 
 
~ ஸ்வாமி | @PrakashSwamy

No comments:

Post a Comment